கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை
இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.
மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று ஜெயலலிதா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார்.
அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது.
Tuesday, November 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment